செவ்வாய், 15 நவம்பர், 2016

கார்த்திகை தீபம் தெரியும்... கார்த்திகைக் கணக்கு தெரியுமா ?

திருக்கார்த்திகை என்றதும் நன் நினைவுக்கு வருவன திருவண்ணாமலையும் தீபத் திருநாளும்தான். இவை மட்டுமின்றி இன்னும்பல சிறப்புகள் உண்டு கார்த்திகை மாதத்துக்கு. என்னென்ன தெரிஞ்சுக்கலாமா?
மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நாள் - கார்த்திகை பௌர்ணமி!
கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.
கார்த்திகை மாத (பிருந்தாவன) துவாதசி நாளில், துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.
கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர். விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.
நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.
தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஶ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.
கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.
வைஷ்ணவக் கோயில்களில், ‘பாஞ்சராத்ர தீபம்’ என்று கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில், கோயிலுக்கு முன்னே, பனையோலை கொண்டு கூடுகள் அமைக்கப்பட்டு சொக்கப்பனை எரிப்பது வழக்கம். ஜோதி வடிவாய் தோன்றிய சொக்கநாதப் பெருமானை நினைவு கூர்ந்தே சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.
கார்த்திகை பௌர்ணமி விழாவில், ஶ்ரீரங்கத்தில், ஐந்தாவது திருவீதியிலிருந்து ஆள நாடான் திருவீதிக்குச் செல்லும் வழியில்... தெற்கு வாசல் கோபுரம் அருகே பெருமாள் எழுந்தருளுவார். அப்போது அவரது முன்னிலையில், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பிறகு சந்தன மண்டபத்தில் எழுந்தருளும்போது, பாசுரங்கள் பாடி அரையர் சுவாமிகள் வழிபடுவது வழக்கம். மேலும்... அப்போது, மார்கழி மாதத் திருநாள் விவரத்தை, கடிதமாக எழுதி பெருமாளிடம் சமர்ப்பிப்பார்கள். இதை ‘ஶ்ரீமுகம்’ என்பர்.
கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்... ஶ்ரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரவாகித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவகிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.
ஈசனின்... நெற்றிக்கண்ணில் இருந்து அவதரித்த ஆறுமுகப்பெருமானை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். ஆகவே, கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை மாதமும் முருகக்கடவுளுக்கு உகந்ததாயிற்று. தை மற்றும் ஆடிக் கிருத்திகைகளில் விரதம் இருப்பதுபோன்று, பெரிய கார்த்திகை (கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம்) அன்றும் கந்தனை வழிபடுவது, விசேஷ பலன்களைப் பெற்றுத்தரும்.
சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சார்த்தி கவசம் போட்டிருப்பர். கார்த்திகை பௌர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.
தேவர்கள் ஆண்டுதோறும் இந்த நன்னாளில், இறைவனை பூஜிப்பதற்கு வருவதாக ஐதீகம். இதையட்டி சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.
திருநெல்வேலி- ஶ்ரீநெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.
பாலக்காடு அருகே உள்ள ஊர் கல்பாதி. இங்குள்ள ஸ்ரீவிஸ்வ நாதஸ்வாமி ஆலயத்தில், கார்த்திகைத் தேரோட்டம் விசேஷம். பூரி ஸ்ரீஜெகநாத ஸ்வாமி கோயில் தேரோட்ட வைபவத்தை அடுத்து, இங்குதான் பெரியளவில் தேரோட்டம் நடைபெறுகிறதாம். இங்கே, 6 சக்கரங்கள் பொருத்தப்பட்ட தேரினை யானைகள் இழுப்பது சிறப்பு!
குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில், காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்!

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016


சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

காலக் கணிதத்தின் சூத்திரம்! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
ண்டைய நாளில் 'ரிது’ ஆவதற்கு முன்பு பெண் குழந்தைகளுக்குத் திருமணம் நடந்தேறிவிடும். அன்றைய நாளில், அவர்கள் ஜாதகங்களில் தென்படும் தசாபுத்தி அந்தரங்களோ, 7-ல் இருக்கும் கிரகமோ அவர்களது திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதில்லை. திருமணத்துக்கான இடையூறுகளை விலக்குவதற்காகப் பரிகாரத்தில் இறங்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. உடல் ஊனமோ, மாறாப் பிணியோ இல்லாதவர்களுக்குக் கல்யாணம் தாமதமாகிக்  கொண்டிருக்கவில்லை. நட்பில் இணைந்த அந்தச் சிறார்கள், பரிணாம வளர்ச்சியில் ஆசைகள் தலைதூக்கும்போது இணைந்து, ஆசைகளைச் சுவைத்து நிறைவு பெற்றுவிடுவார்கள். ஆகையால், திருமண முறிவுக்கும் இடமில்லாமல் இருந்தது.
இன்று முற்றிலும் மாறுபட்ட சூழலைச் சந்திக்கிறோம். திருமணத்தில் இணைவதற்கு இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்கள் பெற்றுவிட்டார்கள். பெற்றோரும் அவர்களிடம் ஒப்படைப்பதை விரும்பினார்கள். திருமணத்தை வாழ்வின் அடித்தளமாகப் பார்ப்பதில்லை. நுகர்பொருள்போல் ஒரு பகுதியாகவே பார்க்கிறார்கள். திருமணத்தில் இணைந்த பிறகு ஒத்துவரவில்லை என்றால், முறித்துக்கொள்வதையே தீர்வாகப் பார்க்கிறார்கள். விவாகரத்துகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இயற்கையான முறையில் குழந்தை பெறுவது குறைந்துகொண்டு வருகிறது.
விஞ்ஞான முன்னேற்றத்தில் ஏற்பட்ட சமுதாய மாற்றத்தை ஏற்கும் மனித இனம், பறிபோகும் பண்பைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. இன்றைய ஜோதிடத்துக்கு விவாகரத்தை இல்லாமல் செய்யவோ, குறைக்கவோ, பண்பைத் தக்க வைக்கவோ இயலவில்லை. ஆலோசனை அளித்து வந்த ஜோதிடம் வியாபாரத்தில் நுழைந்து, தனது முகத்தை மாற்றிக்கொண்டுவிட்டது. அதன் அறிவுரை நல்லதைவிட கெடுதலையும் சுமக்க வைக்கிறது. சமுதாய மாற்றம் அதன் தனி உருவத்தை மறக்கச் செய்துவிட்டது. ஜோதிடத்தை முறையாகப் படிப்பதில் ஆர்வம் இல்லை.
குருகுலவாசம் மறைந்துவிட்டது. பள்ளியிலோ கல்லூரியிலோ பாடத்திட்டத்தில் நுழைய இடம் தரவில்லை. அப்படியிருந்தும், எப்படியோ அது பூதாகாரமாக வளர்ந்திருக்கிறது. அது வளர்ச்சியா, வீக்கமா என்று தெரியவில்லை. சின்னத்திரையிலும் நாளேடுகளிலும் ஜோதிடம் தனியிடத்தைப் பிடித்திருக்கிறது. பாமரர்களை ஈர்க்கும் வகையில் ஜோதிடத்தை எளிமையாக்கித் தந்துள்ளது விஞ்ஞானம். அவர்களது சேவை சமுதாயத்தில் மகிழ்ச்சி பொங்க வைக்க வேண்டும்.

ஆண்- பெண் இருவரது இயல்பும் ஏதாவது ஒரு வகையில் மாறுபட்டி ருக்கும். இயல்புக்குக் காரணம் கர்மவினை என்பதால், மாறுபட்டுதான் இருக்கும். மாறுபட்ட இயல்பை, இன்பத்தைச் சுவைக்கும் வகையில் இணைப்பதே பொருத்தத்தின் குறிக்கோள். இயல்பை மாற்ற இயலாது என்ற கோட்பாட்டைப் பொய்யாக்கி, இணைய வைத்து, வாழ்வை முழுமையாகச் சுவைக்க வைப்பது அதன் வேலை.
ஆசையும் நேசமும் பாசமும் வளர்ந்தோங்கும் நிலையில், ஆசையைச் சுவைத்தே ஆகவேண்டும் என்ற எல்லையை எட்டும்போது, இயல்பு தற்காலிகமாக தன்னை மாற்றிக்கொண்டுவிடும். இன்பச்சுவையில் படிப்படியாக ஈர்ப்பு வளரும்போது, அதற்கு இசைவாக இயல்பு தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டுவிடும். நெருடல் தலைதூக்காத உறவானது நிரந்தரமாக்கப் பட்டுவிடும். ஒருவரின் இயல்பு மற்றவரின் இயல்பைத் தனதாக்கிக் கொண்டுவிடும
கணவன்- மனைவி உறவை மகிழ்ச்சியோடு விளங்கவைக்க, இருவரது மனத்தையும் ஒன்றாக இணையவைக்கச் சொல்லும் தர்மசாஸ்திரம். மனம் ஒன்றானால் இயல்பும் இணைந்துவிடும். மன ஒற்றுமையை ஜாதகத்தில் ஆராய வேண்டும். மனவியல் பின்னணியில் அதன் ஒற்றுமையை வரையறுக்க வேண்டும்.
ஜாதகப் பொருத்தம் மனம் சார்ந்த விஷயம்; உடல் சார்ந்தது அன்று. பிறப்பின் முழுமையை எட்டத் தேவையான விஷயங்கள் அத்தனையும் படைப்பில் சேமிக்கப்படுவது இல்லை. பிறரிடம் இருந்து பெற்று, உள்வாங்கி, குறையை அகற்றி நிறைவு செய்துகொள்ள வேண்டும்.
புருஷன் தன்னிடம் உள்ள குறையை நிறைவு செய்ய, பெண்ணிடம் இருந்து பெற்று நிறைவு பெறவேண்டும். பெண்ணினமும் ஆணினத்திடம் இருந்து பெற்றுதான் முழுமை பெறவேண்டும். ஆக, திருமணத்தில் இருவரும் முழுமை பெறுகிறார்கள். பிறப்பின் முழுமையைத் திருமணம் உறுதி செய்கிறது. ஆணானவன் மனமுவந்து பெண்ணை மகிழ்விக்க நினைத்தால் மட்டுமே பெண்ணுக்கு மகிழ்ச்சி இருக்கும். அவள் தன்னிச்சையாக மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ள இயலாது. இந்த பலவீனமே அவளை அபலையாக்கியது. படைப்பில் ஏற்பட்ட உடலுறுப்புகளின் அமைப்பு அதற்குக் காரணம்.
இரு மனமும் ஒரு மனமாக மாறும் வேளையில் மகிழ்ச்சி சாத்தியமாகிறது. பிரச்னைகளை எதிர்கொள்ளும் வேளை யில், சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் வெளி வருவதற்கு மன ஒற்றுமை உதவும். தாம்பத்தியத்தின் வெற்றி மன ஒற்றுமையின் இறுக்கத்தில் ஈடேறும்.
கல்வி, பதவி, செல்வம், இளமை, பெருமை ஆகியவற்றில் சமமாக இருப்பது மட்டுமே மன ஒற்றுமைக்கு அளவுகோல் ஆகாது. இப்படி எதிர்பார்ப்பவர்களே பெரும்பாலும் விவாகரத்தைச் சந்திக்கின்றனர்.
ஆண்- பெண் இருவரது ஆயுளையும் முதலில் ஆராய வேண்டும். அல்பாயுள் யோகம், மத்யாயுள் யோகம், அகால மிருத்யு, அபமிருத்யு, துர்மரணம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் கிரக அமைப்பை ஆராய வேண்டும். தீர்க்காயுள் யோகங்களை அட்டவணை இட்டு, விரிவாக விளக்கம் அளிக்கும் ஜோதிடம். நீண்ட ஆயுள் இருக்கும் யோகம் இருந்தால், இடையிலேயே ஆயுளைத் துண்டிக்கும் யோகம் அடிபட்டுவிடும் என்ற முடிவுக்கு வரக்கூடாது.
தீர்க்காயுள் யோகம் எல்லோருக்கும் பொதுவானது. அதற்கு ஸாமான்ய யோகம் என்று பெயர். மற்றவை விசேஷ யோகம். அவை எல்லோரிலும் இருக்க இடமில்லை. அங்கு விசேஷ யோகம்தான் நடைமுறைக்கு வரும்; ஸாமான்யம் அடிபட்டுவிடும்.
தொடர்வண்டியில் நமக்குப் பிடித்த இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் உரிமை இருந்தாலும், முன்பதிவு செய்தவனின் இருக்கையில் நாம் அமர்ந்து பயணிக்க இயலாது. இங்கு, விசேஷ நியமமானது ஸாமான்ய நியமத்தை வலுவிழக்கச் செய்கிறது.
எனவே, முதலில் ஆயுளை ஆராய்ந்து தெரிந்துகொள்ளல் வேண்டும். பின்னர், அதன் தரத்தை வரையறுக்க வேண்டும். ஆயுள் இல்லாதவனுக்கு ஜாதகத்தில் சொல்லும் பெருமைகள் அத்தனையும் நடைமுறைக்கு வராது (பூர்வம் ஆயு: பரீஷேத). மனைவி, குழந்தைகள், செல்வம், செல்வாக்கு, பெருமை, அங்கீகாரம் எல்லாம் இருப்பதால், அதை உறுதி செய்ய ஆயுள் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது. விதண்டாவாதங்கள் ஜாதக விஷயத்தில் அரங்கேறாது.
அதன்பிறகு, திருமணத்தை அவர்கள் சந்திப்பார்களா என்று ஆராயவேண்டும். நித்ய பிரம்மசாரி, துறவி, அலி போன்ற யோகங்களை ஆராய்ந்த பிறகு, 7-ஆம் பாவத்தை ஆராய வேண்டும். 7 செழிப்பாக இருந்தாலும், முன்சொன்ன குறைகள் திருமணத்தைச் சுரத்தில்லாமல் செய்துவிடும். அப்படித் திருமணம் நடந்தாலும் ஆயுள் வரை அவளது தொடர்பு நீடிக்குமா என்று ஆராய வேண்டும். அதை அறியப் போதுமான தகவல்கள் உண்டு. நீட்டிப்பு மகிழ்ச்சியோடு இருக்குமா என்றும் ஆராயவேண்டும்.
இருவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதில் மழலைச் செல்வமும் ஒன்று. குறையில்லாத குழந்தைகள் இருக்குமா என்று ஆராய்வதற்கு ஏராளமான தகவல்களைத் திரட்டித் தந்துள்ளது ஜோதிடம்.
சந்தான அரிஷ்டம், சந்தான அபாவம், அனுபவச் சந்தானம், தத்த புத்திர யோகம், வம்சவிச்சேத யோகம் ஆகியவற்றை ஆராய்ந்த பிறகு, குழந்தைச் செல்வத்தின் நிறையைக் கவனிக்கவேண்டும். வசவசவென்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளச் சொல்லாது அது. இருவரது ஆனந்தத்தின் முடிச்சு குழந்தைச் செல்வம் என்பார் பவபூதி (ஆனந்தக்ரந்திரேகோயம் அபத்யமிதிகத்யதே).
தம்பதியின் நீண்ட நெருக்கத்தை உறுதி செய்கிறது குழந்தைகளின் எண்ணிக்கை. நிறையக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் தகுதி இருந்தாலும், அதன் ஆணிவேரை அறுத்துக் கொண்டு குழந்தைகளைக் குறைத்துக்கொள்ளும் போக்கு இன்று பரவலாகக் கடைப்பிடிக் கப்படுகிறது. தேவைகளை வளர்த்துக் கொண்டு, அதை நிறைவு செய்யப் பணம் ஈட்டுவதில் முனையும் வேளையில் ஏற்படும் மனப் போராட்டமானது, குழந்தைகளைக் குறைத்துக் கொள்ள ஊக்கம் அளிக்கிறது. தாம் சேமித்த நுகர்பொருட் களில் மற்றும் ஒருவர் பங்காளியாக வருவதை விரும்பாத சுயநலம், குழந்தைகளைக் குறைத்து நிம்மதி தேடுகிறது என்றுகூடச் சொல்லலாம்.
பிறப்பில் இருந்து ஆரம்பமாகும் தசா காலங்கள் அவர்களது வாழ்வில் சந்திக்கும் இன்ப- துன்பங்களின் அளவை வரையறுக்கும். ஆகவே, வாழ்வின் எல்லையை எட்டும் வரை நிகழும் தசா காலங்களின் தரத்தை ஆராய்ந்து முடிவை எட்ட வேண்டும். விரும்பாத தசா காலங்களை எதிர்த்து முறியடிக்கும் மன உறுதியை ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு உறுதுணையாக, அதாவது மனஉறுதியை ஈட்ட பரிகாரங்கள் வாயிலாக வெற்றிபெற இயலுமா என்றும் ஆராயவேண்டும். இத்தனை விஷயங்களையும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிந்துகொள்ளும் வகையில் ஜாதகத் தகவல்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. அவசரம் அவசரமாக ஆராய்ச்சியில் இறங்காமல் தகவல்களை ஆராய்ந்து அறிந்துகொண்டால் போதுமானது.
நிறைய பந்துக்கள், நன்னடத்தை, ஒழுக்கம், கல்வி, ஆண்- பெண் இலக்கணம், ஆண்மை, பெண்மை, இருவருக்கும் குழந்தைகள் பெறும் தகுதி, நோயின்மை ஆகிய அத்தனையும் இருவரிடமும் இருந்தால், அவர்கள் திருமணத்தில் இணைய முதல் தகுதி பெற்றவர்கள் என்கிறது தர்மசாஸ்திரம் (பந்துசீல லக்ஷண ஸம்பன் னாம் அரோகாம் உபயச்சேத).
நட்சத்திரப் பொருத்தத்தை நம்பி இணை சேர்ப்பது என்பது, விரும்பிய பலனை அளிக்காது. ஆயுள், செல்வம், கல்வி, வேலை, குழந்தைகள் அத்தனையையும் நட்சத்திரப் பொருத்தத்தில் அறிய இயலாது. கண்ணுக்குப் புலப்படாத வருங்காலத்தை நட்சத்திரப் பொருத்தம் வரையறுக்கும் என்பது சிந்தனைக்குப் பொருந்தாத ஒன்று.
அன்பும், பண்பும், சகிப்புத்தன்மையும், மனோதிடமும் வலுவாக இருந்தால், ஜாதகம் பார்க்கவேண்டிய தேவையே எழாது. இதெல்லாம் இல்லாதவரிடத்தில் ஜாதகப் பொருத்தம் பலன் அளிக்காது. பிற்பாடு வந்த ஜோதிடர்கள் ஜாதகப் பொருத்தத்தை விரிவுபடுத்தி எல்லோரிடத்திலும் திணித்தார்கள். வாழ்க்கை அவலமாகப் போகக்கூடாது என்ற நல்லெண்ணம் ஜாதகப் பொருத்தத்தைக் கட்டாயம் ஆக்கியது.
கர்ம வினையின் தாக்கம் அவன் வாழ்க்கையை நரகமாக்கக் கூடாது என்பதால், எச்சரிக்கையோடு வருங்காலத்தை ஆராய்ந்து விழிப்பு உணர்வை அளித்துத் தேற்றிவிடுவது அதன் குறிக்கோள்.
எல்லோரும் இன்பத்தைச் சுவைக்க வேண்டும்; ஒருவர்கூட துயரத்தைத் தொடக்கூடாது என்ற ஸனாதனத்தின் கூற்றை நடைமுறைப்படுத்தும் எண்ணத்தில் ஜாதகப் பொருத்தம் உதயமானது. காலத்தில் எடுக்கும் முயற்சி பலன் அளிக்காமல் இருக்காது (காலேகலு ஸமாரப்தா: பலம்...) என்கிற ஸனாதனக் கோட்பாடு ஜாதகப் பொருத்தத்தை உண்மையாக்குகிறது.
- சிந்திப்போம்...
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?

வேளாங்கண்ணி முதலிலிருந்தே ஒரு கிறித்தவத் தலம் என்றே நம்மில் பெரும்பாலானோர் நம்பவைக்கப்பட்டுள்ளனர். நாம் நினைப்பதுபோல் இது கிறித்தவத் தலமன்று, சைவத் திருத்தலம்.
‘கண்ணி’ என்பது அழகிய விழிகள் பொருந்திய பெண்ணைக் குறிக்கும் சொல். ‘காமக்கண்ணியார்’ குறிஞ்சித் திணை சார்ந்த அகப்பாடல்கள் பாடிய சங்ககாலப் பெண்பாற் புலவரது பெயர்.
தமிழ்ச்சைவ வரலாற்றில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுண்டு. சமய குரவர் காலத்திற்குப்பின் எழுந்த சிவாலயங்களிலும் தேவார மூவர் அமைத்த முறையில் இறைவர் – இறைவியர்க்கு அருந்தமிழ்ப் பெயர்களே வழங்கின என்பதே அது. தேவாரப் பாக்களை ஊன்றிப்படிக்கும்போது அம்பிகையின் இத்தகைய பெயர்கள் பல தெரியவருகின்றன.
வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி”. அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது. இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது.
”மாலை மதியொடுநீ ரர வம்புனை வார்சடையான்
‘வேலனகண்ணி’யொடும் விரும் பும்மிடம்………” (திருஞானசம்பந்தர்)
சேல் [மீன்] போன்ற கண் அமைவதால் “சேலன கண்ணி”, வேல் போன்ற விழி இருப்பதால் “வேலன கண்ணி”. பிற்காலத்தில் வேளாங்கண்ணி எனத் திரிந்தது. வேலன கண்ணி, சேலன கண்ணி என்பன உவமையால் அமையும் பெண்பாற் பெயர்கள்.
”கருந்தடங் கண்ணி” என்னும் பெயரும் அம்மைக்கு உண்டு. ”வேலினேர்தரு கண்ணி” எனவும் தேவாரம் அம்மையைப் போற்றுகிறது. ”இருமலர்க் கண்ணி” இமவான் திருமகளாரின் மற்றோர் அழகிய பெயர். மதுரையம்பதியின் மங்காப்புகழுக்குக் காரணம் மலயத்துவசன் மகளார் அன்னை அங்கயற்கண்ணியின் ஆளுமை. திருக்கற்குடி எனும் தலத்தில் அம்மையின் பெயர் “மையார் கண்ணி” , ”மைமேவு கண்ணி” [அஞ்ஜனாக்ஷி]; கோடியக்கரை – குழகர் ஆலயத்தில் அம்மையின் நாமம் ’மையார் தடங்கண்ணி’. சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒருசேர வருகை புரிந்து வழிபட்ட மிக முக்கியமான திருத்தலம். அருணகிரிநாதரும் பாடியுள்ளார். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனில் இந்த இடம் சுட்டப்படுகிறது. இதுவும் ஒரு கடற்கரைச் சிவத்தலம். “வாள்நுதற்கண்ணி” என்பது மற்றோர் பெயர். அன்னையின் கடைக்கண்பார்வை வீச்சு தவத்தில் ஆழ்ந்திருந்த ஐயனைச் சலனமடையச் செய்தது. விளைவு ? உலகம் உய்ய ஒரு திருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன். இதே ரீதியில் காவியங்கண்ணி, நீள் நெடுங்கண்ணி, வேல்நெடுங்கண்ணி,வரி நெடுங்கண்ணி, வாளார் கண்ணி என்று இன்னும் சில பெயர்களும் உண்டு.
“மானெடுங்கண்ணி” என்று ஒரு திருநாமம். ’மான்போன்ற மருண்ட பார்வையை உடையவள்’ என்பது பொருள்.
’மானெடுங்கண்ணி’ மணிக்கதவு அடைப்ப
இறையவன் இதற்குக் காரணம் ஏது என
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்…..
அம்பிகையின் கயல் போன்ற விழிகளைக் காழிப்பிள்ளையார் பாடுகிறார்:
’நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன் நெடுமா வுரித்த நிகரில்
”சேலன கண்ணி”வண்ண மொருகூ றுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான்…..’
இவ்வாறு, அழகியலில் தோய்ந்த அடியார்கள் இது போல அம்மையின் கண்ணழகையும், கண்களின் கருணையையும் வைத்தே பல இனிய நாமங்களைச் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.
இதெல்லாம் தேவாரப் பாதிப்பன்றி வேறில்லை என உறுதிபடச் சொல்ல முடியும். சிவாலயங்கள்தோறும் ஓரிரு பதிகங்களையாவது பளிங்குப் பலகைகளில் பொறித்து வைப்பது அரசின் கடமை. அப்போது தான் தேவாரப் பதிகங்களுக்கும் ஊர்களுக்கும் உள்ள பிரிக்க முடியாத இணைவு மக்களுக்குத் தெரிய வரும்.
கடற்கரைச் சிவாலயங்கள்: 

தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை முழுவதும் எல்லாப் பகுதிகளிலும் சைவம் செழிப்புற்றிருந்தது.
”மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்……”
என்று சம்பந்தர் முன்பு கடலோரம் அமைந்திருந்த கபாலீஸ்வரர் கோயிலின் மாசிமகத் திருவிழாவை வர்ணிக்கிறார். கடற்கரைத் தலங்களில் எல்லாம் மாசி மகம் தீர்த்தவாரிக்கு இறைத் திருமேனிகளைக் கடற்கரைக்குக் கொண்டு சென்று தீர்த்தவாரி செய்விப்பது இன்றுவரை நடைபெற்று வருகிறது.
கீழைக் கடல் சார்ந்த பல ஆலயங்கள் – திருவொற்றியூர், மயிலைக் கபாலீசுவரர் ஆலயம், திருவான்மியூர் மருந்தீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம், நாகபட்டினம் காயாரோஹணேசுவரர் ஆலயம், கோடியக்கரைக் குழகர் ஆலயம், வேதாரண்யம் -காரைக்கால் – புகார் ஆலயங்கள் போன்றவை முக்கியமானவை. வேளாங்கண்ணி ஆலயமும் இவற்றுள் ஒன்று.
மயிலையில் மட்டும் வாலீசுவரர், மல்லீசுவரர், வெள்ளீசுவரர், காரணீசுவரர், தீர்த்த பாலீசுவரர், விரூபாக்ஷீசுவரர் எனும் தலங்கள்; கபாலீசுவரர் ஆலயம் தவிர. தருமமிகு சென்னையில் பேட்டைகள் தோறும் இன்னும் பல சிவாலயங்கள். இங்கு அவற்றைப் பட்டியலிடவில்லை.
திருவதிகை வீரட்டானம் – அப்பரடிகள் வரலாற்றோடு தொடர்புடையது; சமய குரவர் பாடல் பெற்ற தலம்.
சுவாமி – வீரட்டானேசுவரர்
அம்மை – பெரியநாயகி
திருச்சோபுரம் – சம்பந்தர் பாடிய கடல் தலம். கடலூர் அருகில்.
சுவாமி – சோபுரநாதர்
அம்மை – வேல்நெடுங்கண்ணி
திருச்சாய்க்காடு – காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தே அமைந்துள்ள ஒரு கடல் தலம்.கோச்செங்கட் சோழர் செய்த மாடக்கோயில். இயற்பகை நாயனார் வழிபட்டு, முத்தி பெற்ற திருத்தலம். நாவுக்கரசரும், காழிப்பிள்ளையாரும், ஐயடிகள் காடவர்கோனும் பாடியுள்ளனர். போருக்குத் தயாராக வில்லேந்திய வேலவரை இவ்வாலயத்தில் காணலாம். எதிரிகள் தொல்லையால் பாதிப்புக்கு உள்ளானோர் முருகனை வழிபட்டுத் துயர் நீங்கப்பெறலாம்.
சுவாமி : சாயாவனேச்வரர்
நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே !
– திருஞானசம்பந்தர்
நாகூர் – நாகவல்லி அம்மை உடனுறை நாகநாத ஈசுவரர் கோயில் கொண்ட கடல் தலம்.நாகநாத சுவாமியால் நாகூர் எனும் பெயர். காமிகாகமத்தை ஒட்டியதாக அமைந்த மிகப் பழமையான ஆலயம் இது. நாகூர் தர்கா பின்னர் மராட்டிய மன்னர் ஆட்சிக்காலத்தில் தோன்றியது. நாகவல்லி அம்மை உடனுறை நாகநாதரே உண்மையான ‘நாகூர் ஆண்டவர்’.
நாகப்பட்டினம் பகுதியில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மீனவர் குலத்துதித்த அதிபத்த நாயனார் வாழ்ந்த நுழைப்பாடி என்ற கிராமக் கடல் கோயில்.
முருகப்பெருமான் போருக்குப் புறப்படுமுன்பாக முக்கட்பிரானை வழிபட்ட கடல் தலம் திருச்செந்தூர்;
இராமேசுவரம் இராமபிரான் வழிபட்ட உலகப்புகழ் பெற்ற கடல் தலம்.
இது போன்ற ஒரு கடல் தலம் தான் வேளாங்கண்ணியும்.

இப்பகுதியில் புதையுண்ட தெய்வச் சிலைகளும் ஐம்பொன் தெய்வத் திருமேனிகளும் மிகுந்த அளவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இன்றைய வேளாங்கண்ணியில் ரஜதகிரீசுவரர் சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அப்போது இப்பகுதி குறித்த சரித்திர உண்மைகள் வெளிவர வாய்ப்பிருக்கிறது.

அருள்மிகு ரஜதகிரீஸ்வரர் சிவன் கோயில், வேளாங்கண்ணி
சில நூற்றாண்டுகளுக்குமுன் கடற்கரைப் பகுதிகளில் குடியேறி அவற்றைக் கைப்பற்றிய போர்த்துகீசியர், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் அங்கிருந்த பல இந்து ஆலயங்களை அழித்தனர். அவ்விடங்களில் கிறிஸ்தவ சர்ச்சுகளையும் அமைத்தனர். சென்னை கபாலீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம் இவை இரண்டும் இந்த கிறித்தவ “சகிப்புத்தன்மைக்கு” மிகச் சிறந்த சான்றுகளாகும். ‘கோவா’ கடற்கரைப் பகுதியிலும் பல ஆலயங்களை போர்ச்சுகீசியர் அழித்தனர். 1567ல் போர்த்துகீசிய மிஷநரிகள் கோவாவில் தரைமட்டமாக்கிய ஆலயங்களின் எண்ணிக்கை 350. அக்காலகட்டத்தில் இந்துக்கள் துளசிச்செடி வளர்ப்பதற்குக்கூட அங்கு தடை இருந்தது.
கிறித்தவ மிஷநரிகளின் கலாசாரத் திருட்டு:
காவி உடை அணிதல், ஆலய விமானங்களின் பாணியில் சர்ச் எழுப்புதல், சர்ச்சுக்கு முன்பாகக் கொடிமரம் நிறுவுதல், ’வேதாகமம்’,‘சுவிசேஷம்’ ‘அக்னி அபிஷேகம்’ , ‘ஸர்வாங்க தகன பலி’ போன்ற சங்கதச் சொற்களை வலிந்து புகுத்துதல், கொடியேற்றுதல், தேரிழுத்தல் போன்ற சடங்குகளைத் தம் சமயத்துக்குள் புகுத்தி இந்துக்களைக் கவர்ந்து மதம் பரப்பும் முயற்சிகளைப் பல நூற்றாண்டுகளாகவே கிறித்தவ மிஷநரிகள் தமிழ்நாட்டில் செய்து வருகின்றனர். இதன் ஒரு அங்கமாகவே மேரி மாதாவுக்குத் தமிழர் முறையில் சேலை அணிவித்து , ‘வேலன கண்ணி’ எனும் பெயர் வேளாங்கண்ணி என்று ஆக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
உமையன்னைக்கே உரியது ‘பெரிய நாயகி’ எனும் நாமம். புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில், இறைவன் பெயர் பிரகதீஸ்வரர் (பெருவுடையார்), இறைவி பெயர் பிரகன்னாயகி (பெரிய நாயகி) என்பது அனைவரும் அறிந்தது. இந்தப் பெயரை வெட்கமில்லாமல் களவாடி, ‘பெரியநாயகி மாதா’ எனக் கிறித்தவ மிஷநரிகள் மேரியினுடையதாக மாற்றிக்கொண்டு விட்டனர்.
உண்மை சுடும் . கிறித்தவர் கொதிப்படைவதில் நியாயம் இல்லை. இந்து தெய்வங்களைச் சாத்தான், பிசாசு என ஒருபுறம் இகழ்ந்துகொண்டு, மறுபுறம் இந்து தெய்வப் பெயர்களைக் கவர்ந்து ஏசுவுக்கும் மேரிக்கும் சூட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்பதை குறைந்தபட்ச மனச்சாட்சியுள்ள தமிழ்நாட்டுக் கிறித்தவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
சில கேள்விகள்:
வேளாங்கண்ணி இப்போது மிகப் பிரபலமான கிறித்தவப் புனிதத் தலம் என்றே நிலைநிறுத்தப் பட்டுவிட்டது. ஆனால், இது எப்படி கிறித்தவத் தலமாகிறது என்பதற்கான அடிப்படையான சில கேள்விகள் அப்படியே தான் உள்ளன.
’வேளாங்கண்ணி’ கிறித்தவப் பெயரா ? விவிலிய ஆதாரம் உள்ளதா ?
இல்லையெனில், வேளாங்கண்ணி என்ற பெயரை சூட்டியது யார்? போர்த்துகீசிய மாலுமிகளா, வாத்திகனில் உள்ள போப்பரசரா அல்லது பின்னால் வந்த மிஷநரிகளா? ஐரோப்பிய மிஷநரிகள் இதே போன்று வேறு தூய தமிழ்ப் பெயர் எதையாவது சூட்டியுள்ளார்களா?
திரித்துவத்துக்குப் [Trinity] புறம்பாக மேரியைத் தனியாக பெண் தெய்வமாக வழிபடுவது விவிலியத்திற்கும் கிறித்தவ இறையியலுக்கும் ஏற்புடையதா?
இது ஒரு பொதுவான கிறித்தவ வழிபாட்டுத் தலம் என்றால், கிறித்தவரில் எல்லாப் பிரிவினரும் ஏன் வேளாங்கண்ணிக்கு வந்து வழிபடுவதில்லை ?
ஆரோக்கியத்துக்கும் வேளாங்கண்ணி எனும் பெயருக்கும் என்ன தொடர்பு ?
வேளாங்கண்ணிக்கும் கிழக்குத் தேசத்து லூர்து (Lourdes of the East) என்ற கருத்தாக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? லூர்து மேரி (Lourdes) தலத்தில் கொடியேற்றமும், தேர் பவனியும் உண்டா ? ஐரோப்பியர் மொட்டையடித்துக் கொள்வார்களா ? வேளாங்கண்ணியில் உள்ள மேரி மாதாவின் திருத்தோற்றங்களுக்கு (apparitions) எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்பது கிறித்தவர்களாலேயே ஒப்புக் கொள்ளப் படுகிறது. இவ்வாறிருக்க, இந்த சர்ச் ‘கிழக்கின் லூர்து’ ஆனது எப்படி ?
லூர்து மேரியை ஆரோக்கிய மாதாவாக ஏன் வழிபடுவதில்லை ?
பல அற்புதங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இவ்வழிபாட்டுத்தலத்துக்கு 1962 வரை பஸிலிகா என்ற அந்தஸ்து வழங்கப்படாததன் காரணம் என்ன ? அற்புதங்கள் முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏன் பஸிலிகா அந்தஸ்துக் கிடக்கவில்லை ?
இது தொடக்கத்திலிருந்தே மகிமை கொண்ட திருத்தலமாக நம்பப்பட்டது என்கிறார்கள். ஆனால், வாரன் ஹேஸ்டிங்க்ஸ் முதல் மவுண்ட்பேட்டன் வரையில் இந்தியாவை ஆண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கவர்னர்களில் ஒருவர் கூட ஆரோக்கிய மாதாவை வந்து வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. இந்த முரணுக்கு என்ன காரணம்?
மிகச் சமீபகாலத்தில் வாழ்ந்த கிருஷ்ண பிள்ளை (இரட்சணிய யாத்திரிகம் எழுதியவர்), மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்ற தொடக்க காலக் கிறித்தவத் தமிழ் அறிஞர்கள் கூட வேளாங்கண்ணி திருத்தோற்றம் குறித்து எழுதியுள்ளதாகவோ வேளாங்கண்ணியில் மொட்டைபோட்டு வழிபட்டதாகவோ குறிப்புகள் இல்லை. 1981ல் மறைந்த தேவநேயப்பாவாணர் கூட‘கிறித்தவக் கீர்த்தனைகள்’ நூலில் ஆரோக்கிய மாதாவைக் குறித்துப் பாடல்கள் இல்லை. இதைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?
ஏராளமான இந்தியக் கிறிஸ்தவர்கள் குழுமிக் கும்பிடும் வேளாங்கண்ணி சர்ச் ஆலயத்தில் இதுவரை எந்தப் போப்பும் ஆரோக்கிய மாதாவை மண்டியிட்டு வணங்கியுள்ளதாகத் தெரியவில்லை. இதற்கு என்ன காரணம்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஆதாரபூர்வமாக விடைகாண முற்பட்டால், வேளாங்கண்ணியின் உண்மையான சரித்திரம் தெரியவரக்கூடும்.

புதன், 25 நவம்பர், 2015

கார்த்தகை தீபம்

 கார்த்தகை தீபம் அன்று சொக்கப்பனை முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தில் ஏற்றப்பற்றது. பனை ஓலைகளை கோபுர வடிவில் செய்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது.  சிவபெருமான ஜோதிப் பிழம்பாக காட்சியளித்ததை குறிப்பிடும் வகையில் சொக்கப்பனை ஏற்றப்பட்டும் மனதில் உள்ள‌ இருளாகிய அறியாமை, பொறாமை ஆகியவற்றை ஒளியாகிய ஞானத்தைக் கொண்டு இறைவன் போக்குகின்றமையே சொக்கப்பனை.  முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தில் சொக்கப்பனை படங்களை காணலாம்.














செவ்வாய், 24 நவம்பர், 2015

மதமாற்றம் ஒரு தீவிரவாதம்!!!

-தமிழ்செல்வி, மலேசியா

நான் நேசித்தவரின் பெயர், ஜார்ஜ். அவர் என்னை அவரின் குடும்பத்தாரை சந்திக்க என்னுடைய காரில் அழைத்துச் சென்றார். என்னை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு, ஜார்ஜ் ஒரு வேலை காரணமாக அவரின் மிதியுந்தை (பைக்கை) எடுத்து வெளியே சென்றுவிட்டார். அவர் குடும்பத்தார் என்னிடம் தனியாக பேச வேண்டும் என சொல்லியிருப்பார்கள் போலும்... அப்போது தான் முதன்முதலில் அவரின் வீட்டைப் பார்த்தேன். வீடு முழுவதும் சிலுவைகள், ஜீசஸ் சித்திரங்கள், பைபிள் வாசகங்கள் நிறைந்திருந்தன. ஜார்ஜ்ஜின் தாயாரைக் கண்டு வணக்கம் கூறினேன். அவர் கழுத்தில் தாலியைப் போல் சிலுவை தொங்கியது. என் நெற்றியில் இருக்கும் பொட்டைப் பார்த்து என்னிடம் "கல்யாணத்துக்கு அப்புறமும் இவ்வளவு பெரிய பொட்டு தான் வைப்பியா?" எனக் கேட்டார். நானும் சிரித்துக் கொண்டே "அதுதானே நம்ம பண்பாடு?" என சொன்னேன்.
ஜார்ஜ்ஜின் தாயார் முகத்தை சளித்துக் கொண்டு சென்றார். சிறிதுநேரம் கழித்து ஜார்ஜ்ஜின் தந்தை வந்தார். நான் உடனே சோபாவில் இருந்து எழுந்து வணக்கம் என சொன்னேன். "நீதான் ஜார்ஜ்ஜை காதலிக்கிற பொண்ணா?" என கேட்டார். "நாங்க ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறோம்" என பதில் கூறினேன். அவரும் முகம் சளித்தபடியே, ஒரு பெருமூச்சுடன் என் குடும்பத்தைப் பற்றி கேட்டார். நான் என் பெற்றோருக்கு ஒரே மகள் என்ற விபரத்தைக் கூறினேன். பின் மற்றமற்ற விபரங்களையும் கூறினேன். அவர் உடனே "ஜார்ஜ்ஜை கல்யாணம் செய்ய எங்க மதத்துக்கு மாற தயாரா?" என கேட்டார். நான் திகைத்துப் போய்விட்டேன்.
"ஜார்ஜ்ஜோட மதத்தை விரும்பி அவனை நான் காதலிக்கல்ல. அவன் மனச விரும்பி தான் அவனை காதலிச்சேன். நீங்க ஒரு பெரிய மனுஷனா இருந்துட்டு மதமாறனும் அது இதுன்னு பேசறிங்க?" என சற்று ஆவேசமாக கேட்டேன். அப்போது ஜார்ஜ்ஜின் தாயார் இடையில் புகுந்து பதில் கொடுத்தார் "எங்க வீட்டுக்கு வரபோற மருமகள் ஒரு கிறிஸ்தவளா தான் வரனும்." என கூறினார். நான் சிரித்தேன். அப்போது தான் நான் ஓர் இந்து என்ற விழிப்புணர்வே எனக்கு ஏற்பட்டது. நான் ஓர் இந்து, நான் நேசித்தவர் ஒரு கிறிஸ்தவர். இரண்டும் வெவ்வேறு பாதை. ஓர் இந்து தான் எம்மதமும் சம்மதம் என மூடநம்பிக்கை கொண்டிருப்பான், மற்ற மதத்தவனுக்கு அவன் மதம் தான் பெரியது. இது போன்ற தெளிவான சிந்தனைகள் யாவும் என் சிந்தையில் சூழ்ந்தன.
நான் சிரித்துவிட்டு, மௌனமாக சிந்திப்பதைக் கண்ட ஜார்ஜ்ஜின் பெற்றோர் தாங்கள் வென்றுவிட்டதாக எண்ணி ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். இத்தனை நாட்களாக எல்லா மதங்களும், எல்லா தெய்வங்களும் ஒன்றுதான் என எண்ணி வாழ்ந்த எனக்கு, அதெல்லாம் சும்மா என அவர்கள் உணரவைத்தனர். நான் பலமுறை கோவில்களுக்குச் சென்றும், பல மந்திரங்கள் ஜெபித்திருந்தாலும், வாயினிக்க தேவாரங்கள் பாடியிருந்தாலும் நான் ஓர் இந்து, என்னோடு பழகும் இன்னவர் இம்மதத்தவர்; இந்துவல்லர் என்றெல்லாம் நான் பிரித்துநோக்கிய தே இல்லையே?? இதுதான் எனக்கு கிடைத்த பலன்! என் பூருவீக நம்பிக்கையை நான் தூக்கி எறியவேண்டும். ஏன்?? இந்து பலவீனமானவன்.
முடிவாக எம்மதமும் சம்மதமில்லை, என் மதம் மட்டுமே சம்மதம் என முடிவெடுத்தேன். என்னுடைய கார் சாவியை எடுத்து வெளியேறினேன். "வீட்டுக்குப் போய் நல்லா யோசிச்சி பதில் சொல்லும்மா" என குழைந்தனர் ஜார்ஜ்ஜின் பெற்றோர். "நல்லா யோசிச்சிட்டேன். எனக்கு நல்ல மனசுள்ள புருஷன், மாமனார், மாமியார் தான் வேணும்; மதம்புடிச்ச மிருகங்க வேணா!" என கூறிவிட்டு காரை எடுத்து அங்கிருந்து புறப்பட்டு விட்டேன். மகனை மணக்க மதமாற சொல்லும் அரக்கர்கள் பூமியில் இருக்கையில், என் மதத்தை தற்காத்துக் கொண்ட என்னை 'மதவெறி பிடித்தவள்' என்று கூறும் அறிவிலிகளும் உள்ளனர்.
என் வீட்டிற்கு திரும்பியவுடன், நடந்ததை எல்லாம் என் அம்மாவிடம் கூறினேன். உடனே என் அம்மா, "மனுஷங்கள விட மதத்த பெருசா நினைக்கிறவங்க உலகத்துல இருக்காங்க. ஆனா அவங்க பெருசா நினைக்கிற மதம் தான் அவங்கள மனுஷனாவே வாழவிடாம, மிருகமா வாழவைக்குது." என சொன்னார். ஜார்ஜ் என்னை சந்தித்து பேசினான். "மனுஷங்க இல்லாத வெறும் மதம் மட்டும் வாழுற வீட்டுல வந்து வாழ எனக்கு விருப்பமில்ல" என சொல்லிவிட்டேன். பிறகு, என் அலுவலக வேலையில் முழுமையாக ஈடுபட்டு அவனை மறக்க ஆரம்பித்தேன். ஐந்தாண்டுகள் கடந்தன.
இப்போது இரண்டு வயதில் எனக்கு ஒரு மகள் இருக்கிறாள், அவள் பெயர் கலையரசி. என் கணவரின் பெயர் கணேசன். நான் இப்போது என் அன்பு கணவர் மற்றும் மகளோடு மகிழ்ச்சியாக வாழ்கிறேன். ஆனால் ஜார்ஜ் ஏதோ தவறான பாதையில் சென்று, திருட்டு வழக்கில் சிக்கி இப்போது சிறைதண்டனை அனுபவிக்கிறான். சிவனருளால், நான் என் வாழ்க்கையில் எப்போதும் மிக சரியான முடிவை எடுக்க தவறியதில்லை! என் மகள் பருவமடைந்ததும் அவளுக்கு நான் ஒன்றை மட்டும் எப்போதும் கூறுவேன், "நீ விரும்புபவன் கறுப்போ சிவப்போ, ஏழையோ பணக்காரனோ, நெட்டையோ குட்டையோ, என்ன சாதியோ சம்பிரதாயமோ, அதெல்லாம் தேவையே இல்லை. நீ நேசிக்கிறவன் ஓர் இந்துவாக தான் இருக்கனும். நம்ம மொழி, பண்பாடு, சமயம் இதையெல்லாம் காக்கவேண்டியது நம்ம பொறுப்பு". என்னைப் போல் என் இந்து சகோதரிகள், ஒருபோதும் நம் தாய்மதத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கவேண்டும்!
அன்புடன் மலேசியாவிலிருந்து தமிழ்செல்வி.

வெள்ளி, 27 ஜூன், 2014

ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம்

பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல்,திருநீறு தரித்தல்,ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும்.
ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன்,மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான்.
...

ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில்,நரகங்களிலிருந்து விடுபடுகிறான்.
எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி;எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம் நமசிவாய’ என்னும் மந்திரத்தை உச்சரித்து,ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம்.

ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது.ஆதலால் ஒருவன் எந்நேரமும் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும்.
ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை;
ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை