சனி, 16 பிப்ரவரி, 2013

நீ ஒரு துறவி என்பதை நிரூபித்து விட்டாய்

கெளதமர் அங்குலிமாலை தீட்சை கொடுத்து சீடனாக்கியபின் அவனை தன் அருகில் அழைத்தார்.., "அங்குலிமால்..! நீ இப்போது ஒரு துறவி. நீ இன்று பிட்ஷை எடுக்கப் போகும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏனெனில் இந்த முழு நாடுமே உன்னைக் கண்டு பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது. நீ பிச்சை எடுக்கப் போகும்போது உனக்காக எந்த கதவும் திறக்காமல் போகலாம். அச்சத்தினால் எதிர்க்காதே. இந்த எளிய மக்களால் உன்னுடைய மாறுதலை பார்க்க முடியாது. அவர்கள் பழி தீர்க்கக் கூட செய்யலாம். ஆனால் நீ ஒரு துறவி என்பதை நீதான் நிரூபிக்க வேண்டும்..!" என்றார்.

அங்குலிமால் சென்றான். புத்தர் என்ன நடக்கப் போகிறதென்று அறிந்துகொள்ள அவன் பின்னே சென்றார். அவர் சொன்னதுதான் நடந்தது. அவனுக்கு எந்த கதவுகளும் திறக்கபடவில்லை, அவனுக்கு சாப்பிட யாரும் எதுவும் கொடுக்க வில்லை.

மக்கள் தங்களது வீட்டின் மாடியில், கூரையில் நின்று கொண்டு அவன் மேல் கற்களை வீசினார்கள். – நெருங்கி வர பயந்து கொண்டு தூரத்தில் இருந்த படியே மாடியில் கூரையில் நின்றபடி அவன் மேல் கற்களை மழையாக பொழிந்தனர். இறுதியில் அங்குலிமால் தெருவில் வீழ்ந்த பின்னும் அவர்கள் அவன் மேல் கற்களை வீசிக் கொண்டே இருந்தனர். அவன் உடல் முழுவதும் ரத்தகாயமாக ரத்தம் ஓடிக்கொண்டு இருந்தது.

புத்தர் அவனை நெருங்கி வந்த போது அவன் கற்களால் மூடப் பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அவனை அந்த கற்களிலிருந்து வெளியே இழுத்த போது அவன் தனது கடைசி நிமிடங்களில் இருந்தான். புத்தர், "அங்குலிமால், நீ ஒரு துறவி என்பதை நிரூபித்து விட்டாய். ஒரு வினாடியில் ஒரு பாவி துறவியாக முடியும் என்பதை நீ நிரூபித்து விட்டாய். நீ ஒரு பாவியாக வாழ்ந்தாய். ஆனால் ஒரு துறவியாக இறக்கிறாய்..!" என்றார்.

அங்குலிமால் புத்தரின் பாதங்களை தொட்டவண்ணம் தனது உயிரை விட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக