திங்கள், 11 மார்ச், 2013

சிறுநீரக நோய்களுக்கான சிறப்பு உணவு


நம் உடம்பின் சிறுநீரகங்கள் மிக அற்புதமான இயற்கையின் படைப்பு. கிட்ட்த்தட்ட 10லட்சம் நெஃப்ரான்களை(பில்டர்கள் உள்ள அமைப்பு) உள்ளடக்கிய அந்த உறுப்பினுள் ஒரு நாளைக்கு 50,000மிலி தண்ணீரை உள்செல்கிறது. 1500 மிலிதண்ணீரைச் சிறுநீராக தினசரி வெளியேற்றுகிறது. கூடவே தேவைக்கு அதிகமான உப்புக்கள், உடலுக்குள் வந்துவிட்ட நச்சுக்கள், தேவைக்கு மீந்துவிட்ட மருந்துக் கூறுகள் எல்லாவற்றையும் தினசரி வெளித்தள்ளும் அதன் பணி மகத்தானது. கழிவு வெளியேற்றுவது மட்டுமல்ல, விட்டமின் ’டி’ தயாரிப்பு, இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ’எரித்ரோபாய்டின்’ உற்பத்தி செய்வது, இரத்த அழுத்தத்தைக் கூடாது காக்க, ’ரெனின்’ சுரப்பைத் தருவது என இதன் பணிகள் இன்னும் ஏராளம். மொத்தத்தில், இதயத்திற்கு அடுத்து ஓயாது உழைக்கும் உறுப்பு சிறுநீரகம் எனலாம்..

தற்போது சர்க்கரை நோயின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து அடிக்கடி செய்திகள் படித்து வருகிறோம். அதில் தொடரும் இன்னொரு ஆபத்து, நாட்பட்ட சிறுநீரக நோய்கள். நீரிழிவு நோயை எப்போதும் கட்டுப்பாடில் வைத்திருக்கத் தவறும் பட்சத்தில் பின்னாட்களில் அது சிறுநீரகத்தைப் பாதிக்கும் வாய்ப்பு மிக அதிகம். சர்க்கரை அல்லாது, இன்னும் பல காரணங்களால் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய்கள் ஏற்படக் கூடும். அடிக்கடி வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக் கொள்ளுதல், எந்த மருந்தெனினும் மருத்துவர் பரிந்துரையின்றி சுய வைத்தியம் செய்து கொள்ளுதலில் சிறுநீரகம் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம்.பாரம்பரியமாக குடும்பத்தில் இத்தொல்லை இருப்பினும் நாம் கவனமாக இருப்பதும் அவசியம்.
மற்ற எந்த நோய்க்கும் இல்லாதபடி, சிறுநீரக நோய்க்கு உணவில் மிகுந்த கவனம் தேவை. கட்டுப்பாடுகளும் கொஞ்சம் அதிகம். இதில் கவனம் தவறுவதும் அலட்சியமாக இருப்பதும் சிறுநீரக முழுச்செயலிழப்பையும், உயிருக்கே ஆபத்தையும் கொடுத்துவிடும்.

சிறு நீரகத்தை ஆரம்பம் முதல் நோயின்றி பாதுகாப்பதுதான் மிக முக்கியம். நமக்கு எந்த நோய் இருக்கிறதோ இல்லையோ, சிறுநீரகத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய எந்த விஷயத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது. தினசரி மூன்று முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது மிக அவசியம். பலரும் பணி அவசரத்தில் தவறவிடுவது இதனைத்தான்.

அடுத்து உணவில், சிறுநீரை நன்கு வெளியேற்ற உதவிடும் வாழைத் தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளைத் தவறாது வாரம் மூன்று, நான்கு நாட்களேனும் சாப்பிடுவது மிக அவசியம். நாற்பதுகளைத் தொடும்போதே அதிக உப்பு தவிர்ப்பது மிக அவசியம் ஆகிவிடுகிறது. அதிக உப்பு சிறுநீரகத்தின் பணிக்கு சிரமம் கொடுக்கும் ஒன்று. இனியாவது தயிர்சாதத்திற்கு ஊறுகாய் இல்லைனா எப்படி? என அடம் பிடிக்காதீர்.

சரி, ஏதோ மருத்துவ காரணத்தில் லேசான சிறுநீரக செயலிழப்பு தெரிய ஆரம்பித்து விடுகிறது என்றால், பதட்டப்பட வேண்டாம். எந்த அளவிற்கு உணவுக் கட்டுப்பாடு உங்களுக்கு உள்ளதோ அந்த அளவில் நோயினை தள்ளிப்போட கண்டிப்பாக முடியும். இன்றளவில் சிறுநீரகச் செயலிழப்பு நோயை முழுமையாகக் குணப்படுத்த எந்த மருத்துவத் துறையிலும் மருந்துகள் இல்லை. முடிந்தவரை நோயின் தீவிரநிலையை தள்ளிப்போடத் தான் முடிகிறது. ஆதலால், உணவுத் தேர்வு மிக மிக முக்கியமானது.

உணவில் நீர், புரதம், சோடியம் மற்றும் பொட்டாசியம் உப்புக்கள், இரும்புச்சத்து இவற்றைச் சீர்படுத்துவது சிறுநீரக நோய்களில் ரொம்ப முக்கியமானது. எந்த அளவிற்கு சிறுநீர் வெளியேறுகிறதோ அதைப் பொறுத்து நீர் அருந்தும் அளவை உங்கள் மருத்துவர் நிர்ணயிப்பார். அதனை அப்படியே பின்பற்றுவது மிக முக்கியம். இரத்தத்தில், மற்றும் வெளியேறும் சிறுநீரில் உள்ள உப்பைப் பொறுத்தே உள்ளே சேர்க்கும் உப்பின் அளவும் இருந்திட வேண்டும்.

புரத உணவைப் பொறுத்த மட்டில் காய்கறிப் புரதம் சிறந்தது. சிக்கனில் கிடைக்கும் புரதத்தை காட்டிலும் பாசிப்பயறின் புரதம் சிறுநீரக நோயினருக்கு ஏற்றது. ஏனெனில், சிக்கனில் புரதத்துடன் உப்புக்களும் கூடுதல் அளவில் உள் வந்துவிடும். பயறுப்புரதத்தில் அந்த பயம் இல்லை. சிறுநீரக நோயினருக்கு இரத்த்த்தில் மெல்ல மெல்ல பொட்டாசியம் சேரும் வாய்ப்பு வந்து விடுவதால், அது இதயத்தை அதன் துடிப்பின் ரிதத்தை மாற்றிடவும், திடீர் இதய செயலிழப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. சோடியமும் பொட்டாசியமும் குறைந்த அளவில் உள்ள பழங்களையே எடுக்க வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்கனியை தவிர்ப்பது நல்லது. இவை நிறைய பொட்டசியச் சத்து உடையன. பைனாப்பிள், பப்பாளி, கொய்யா முதலிய பழங்கள் குறைந்த அளவிலான பொட்டாசியச்சத்து உடையன. கேரட், காலிஃப்ளவர், பீட்ரூட், நூல்கோல், பருப்புக் கீரை இவை சோடியம் அதிகம் உள்ளவை. இதனையும் உணவில் தவிர்க்க வேண்டும்.

காய்கறி, கீரைகளை நிறைய நீர்விட்டும் நன்கு வேகவைத்தும், பின் அந்த நீரை வடித்து விட்டு சாப்பிட வேண்டும். இம்முறையில் சமைப்பது உப்புக்கள் அதிகஅளவில் உணவில் தங்காமல் பார்த்துக் கொள்ளும்.

பொங்கல் சமயத்தில் வாசக்காலில் சாங்கியத்திற்கு கட்டுவோமே, வெண்ணிற பூக்களாலான அந்த சிறுகண்பீளை, வயலோரங்களில் களைச்செடியாய் வளர்ந்து நிற்கும் நீர்முள்ளி செடி, காய்ந்த வரப்புகளில் நடக்கும் போது காலில் குத்தும் நெருஞ்சிமுள், பூனை மீசை எனும் செடி இவற்றை சரியாக அடையாளம் தெரிந்து தேர்ந்தெடுத்து, தேநீராக்கி காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறுநீரக நோயாளிகட்கு ஒரு functional food ஆகப் பயன்தரும்.. மருத்துவத்தைப் பொறுத்தவரை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையுமே சாப்பிடுவது சரியல்ல.

சரியான உடற்பயிற்சி, யோகா மற்றும் பிராணாயாமம், மருத்துவரின் அறிவுரைப்படி சரியான சிகிச்சை, தேர்ந்தெடுத்த சரியான உணவு இவை மட்டுமே சிறுநீரக நோயைக் கட்டுப்பாடில் வைத்திருக்க உதவும். தேவையெல்லாம், அலட்சியமில்லாத, அக்கறையும் கூடுதல் மெனக்கிடலும் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக