சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு, சீர்காழியில் அவதரித்தவர் திருஞானசம்பந்தர். மயிலை கபாலீஸ்வரரை முதன்மைப்படுத்தி, 10 பாடல்கள் புனைந்து, சிவநேசன் செட்டியார் மகள் பூம்பாவையை அவர் உயிர்ப்பிக்கச் செய்த நிகழ்வை அறிவோம். அவ்வாறு தாம் இயற்றிய பாடல்களில் தமிழர்கள் கொண்டாட வேண்டிய விழாக்களையும் பட்டியலிட்டிருக்கிறார் திருஞானசம்பந்தர். ஆனால் மயிலை கற்பகவல்லி மீது அவர் பாடல் இயற்றவில்லை என்பது அந்தப் பாடல்களிலிருந்து தெரியவருகிறது.
19ம் நூற்றாண்டில்தான், மக்களிடையே சக்தி வழிபாடு மிகுந்ததாலும், அதற்குப் பிறகே அம்பாள் மீதான பாடல் இயற்றப்படுவது வழக்கமாகியது என்ற உண்மையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். பவுர்ணமி திதி அன்று எந்த நட்சத்திரம் சேர்கிறதோ, அன்றைக்கு விழா கொண்டாடுங்கள் என திருஞானசம்பந்தர் அறிவுறுத்தியுள்ளார். இப்படி ஒரு ஒழுகுமுறையை இவருக்கு முன்னர் யாரும் அறிவித்ததாக ஆதாரம் இல்லை எனலாம். இந்த ஒழுகுமுறைப் படி, கார்த்திகையில் ஒளி விழா, மார்கழியில் திருவாதிரை விழா, தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா, மாசியில் கடல் ஆட்டு விழா, பங்குனியில் உத்திரத் திருவிழா என இப்போது நாம் கொண்டாடி வருகிறோம். இந்த வகையில் ஒன்றுதான், வருடக் கடைசி மாதமான பங்குனியில் வரும் உத்திர நட்சத்திர தினம்.
‘‘மலிவிழா வீதிமடநல்லார் மாமயிலைகலி விழாக்கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்பலிவிழா பாடல்செய் பங்குனியுத்திரத்தின் நாள் ஒலிவிழாகாணாதே போதியோ பூம்பாவாய்’’ -என்கிறார் திருஞானசம்பந்தர்.
1200 ஆண்டுகளுக்கு முன்னரே, பங்குனி உத்திரத்தைப் பற்றி அவர் பாடியதும், 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்தில் உத்திர விழாவைப் பற்றி கூறப்பட்டதற்கு ஆதாரமாக அமைந்திருக்கலாம். அகநானூறு எனும் நூலில் 137ம் பாடலில், இந்த விழா பற்றிய குறிப்பு வருகிறது. பண்டைய நாளில், ஒருவன் மூன்றே மூன்று காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டுச் செல்வது வழக்கம்:
1. பணம் சம்பாதிக்க, வியாபாரம் செய்ய.2. அடுத்த நாட்டின் மீது போர் தொடுக்க தம் மன்னருக்கு உறுதுணையாகச் செல்ல.3. ஆன்மிகத் தலங்களை தரிசிக்க
இப்படிச் செல்லும் கணவன், தன் மனைவியிடம் தான் திரும்பிவர 2 மாதத்திற்கு மேலாகும் எனக் கூறுவதாகவும், அதைக் கேட்டதிலிருந்து மனைவி, அன்று முதல் குளிக்காமலும் அலங்கரித்துக் கொள்ளாமலும், சரிவர உணவு உட்கொள்ளாமலும் நெற்றியில் திலகம் இடாமலும் விளங்கியதாகவும் அதைக் கண்ட தோழி, ‘ஏன் இந்த அலங்கோலம்? உன் கணவன் உன்னைவிட்டு நிரந்தரமாகவா பிரிந்து சென்றுவிட்டார்? அவர் உன்னைப் பிரியவும் மாட்டார். அதனால் கவலையை விடு’ என்று கூறி, அவளுக்கு பங்குனியின் சிறப்பை விவரிப்பதாகவும் அகநானூறு பாடல் சொல்கிறது.
‘‘பங்குனி முயக்க கழிந்த வழிநாள், தீயின் அடுப்பில் அரங்கம் போல் பெரும் பாழு கொண்டது உந்தன் நுதலே’’ -என்பது அப்பாடல். அதாவது, ‘நம் நாட்டில் சிவாலயங்களில் பங்குனி மாதத்தில் உத்திர தினத்தன்று வெகு சிறப்பாக விழா கொண்டாடுவர். அன்று அண்டைய ஊர்களிலிருந்து மக்கள் திரளாக வந்து கூடுவர். நாதஸ்வர இசையும், வாண வேடிக்கைகளும் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அவ்விழா முடிந்த மறுநாள் விழா நிகழ்ந்த இடத்தைப் பார்த்தால் வெறிச்சென்றிருக்கும்.
கோலாகலமாகக் கொண்டாடிய விழா மறுநாள் எவ்விதம் வெறிச்சோடி இருக்கிறதோ, அது போன்று நீ அலங்காரம் செய்து கொள்ளாது, உணவு அருந்தாது, திலகமிடாது விளங்கும் காட்சியும் உள்ளது. குளித்து அலங்கரித்து குங்குமப் பொட்டோடு விளங்கினால் பங்குனி உத்திரத் திருவிழா போன்று மங்களகரமாக விளங்குவாய்’ என்று பொருள். தட்சனால் ஏற்பட்ட அவமானம் தாங்காது, இமயவரம்பனுக்கு மகளாகப் பிறந்து, காஞ்சியில் 32 அறங்களை வளர்த்ததும், காஞ்சியில் ஏகாம்பரநாதனை அம்பிகை திருமணம் செய்து கொண்ட நாளும் பங்குனி உத்திரமேயாகும்.
நமிநந்தி அடிகள் ஒரு சமயம் விளக்கெரிக்க எண்ணெய் கிடைக்காது, தண்ணீரைக் கொண்டே விளக்கேற்றி வைத்த சிறந்த சிவபக்தர். உத்திரத்தன்று ஆலயத்தில் நிறைய விளக்குகள் ஒளிர அரும்பாடுபட்டவர். இத்தகைய பங்குனியின் சிறப்பைப் பற்றி சம்பந்த பெருமான் கூறியுள்ளதை உலகோர்க்கு விளங்க வைத்த பெருமை, நமிநந்தி அடிகளையே சாரும்.
- மு.அருணகிரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக