வெள்ளி, 7 டிசம்பர், 2012

இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும்

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும் கொல்லென வேண்டா—நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால் ( வாக்குண்டாம் )
பொருள்: தென்னை மரம் நிலத்திலிருந்து குடித்த தண்ணீரை சுவையுடைய இளநீராக தலை வழியாகத் தருதல் போல, ஒருவர்க்கு உதவி செய்தால் தருணம் வரும்போது மிகுதியாகத் திருப்பிச் செய்வார். ஆகையால் ஒருவர்க்குச் செய்த உதவி எப்போது திருப்பிக் கிடைக்கும் என்று எண்ணத் தேவையே இல்லை.
இந்த அருமையான கருத்தை 1500 ஆண்டுகளுக்கு முன் வடமொழியில் நீதிசதகம் (ஸ்லோகம் : ப்ரதம வயசி ப்லுதம் தோயம்------) எழுதிய பர்த்ருஹரி என்ற புகழ்மிகு கவிஞனும் அழகாகப் பாடிவிட்டான்:
பொருள்: மரம் நட்ட சில ஆண்டுகளுக்கு மட்டுமே நீர் பாய்ச்சுகிறோம். அதற்கு நன்றிக் கடனாக வாழ் நாள் முழுதும் தன் தலையில் பெரிய பாரத்தைச் சுமந்து கொண்டு சுவையான இளநீரைத் தருகிறது தென்னை.
தென்னை மரத்துக்கும் இளநீருக்கும் இப்படி அறிமுகம் தேவை இல்லை. தேங்காய் என்பது கோவில்களிலும் பூஜைகளிலும் உணவிலும் தவிர்க்க முடியாத ஒன்று. இலை முதல் நார் வரை எல்லா பகுதிகளும் பயன் படுவதால் இந்த மரத்தை கற்பக விருட்சமாகக் கருதுவோரும் உண்டு.
தமிழ்நாட்டில் திருத் தெங்கூர், வட குரங்காடு துறை முதலிய கோவில்களில் தல விருட்சமாக விளங்குகிறது. சித்த, ஆயுர்வேத வைத்தியத்தில் தேங்காய் எண்ணை முதல் மரத்தின் பல பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. கள், சர்க்கரை, கயிறு, கூடை, விசிறி, கட்டில், உத்தரம் என எல்லாம் தந்து மனிதனின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து விட்டது.
இளநீர் சூட்டைத் தவிர்க்கும் என்பது உலகறிந்த உண்மை. கோடை காலம் வந்து விட்டால் சாலை ஓரம் முழுதும் மலை போலக் குவித்து, பொழுது சாயும் வரை விறுவிறுப்பாக விற்கின்றனர். இதெல்லாம் பழைய கதை.

Picture : Coconut tree in Hawai

புதிய கதை என்னவென்றால் இதை அட்டை டப்பாவில் ( carton) அடைத்து ஜூஸ் போல அமெரிக்கவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விற்கத் துவங்கி விட்டார்கள். இதன் காரணமாக இதற்கு புது கிராக்கி வந்துவிட்டது. கோகோஸ் ந்யூசிபெரா (cocos nucifera) என்ற தாவரவியல் பெயருடன் உலகின் பெரும்பாலான கடற்கரைகளை அழகுபடுத்தும் மரம் இது.

வெளிநாடுகளில் ஒரு பொருளை விற்கவேண்டும் என்றால் அதன் எடை, அது தயாரிக்கப்பட்ட நாள், எத்தனை நாள் வரை அதைப் பயன்படுத்தலாம், அதில் என்ன என்ன சத்துக்கள் எவ்வளவு இருக்கின்றன என்று எல்லா வற்றையும் எழுத வேண்டும். இப்படி எழுதிய உடனே இளநீருக்கு புது “மவுசு” வந்து விட்டது.

இளநீரில் பொட்டாசியம் மக்னிசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், தாமிர, கந்தக, இரும்புச் சத்து, வைட்டமின்கள் உண்டு. வாழைப்பழத்தைப் போல இரண்டு மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கொழுப்புச் சத்து அறவே இல்லை. சர்க்கரைச் சத்தோ ஆரஞ்சு பழரசம் போன்ற பழ ரசங்களை விட மிகக் குறைவு. வயிற்றிலுள்ள புழுக்களைக் கொல்லும். சிறு நீரகத்தைப் பாதுகாக்கும். சில வகை புரதச் சத்து பசும்பாலை விட அதிகம் கொண்டது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை யாருக்கும் கொடுக்கலாம். சிறு நீரக, குடல் தொற்று நோய்கள், வயிற்றுப் போக்கு எல்லாவற்றுக்கும் மருந்தும் ஆகும்.

இளநீரில் உள்ள வேதிப் பொருட்களின் அளவு


மொத்த திடப்பொருள்                                               6.5 %
குளுக்கோஸ், பிராக்டோஸ்                                  4.4 %
தாதுப்பொருட்கள்                                                       0.6 %
புரதச்சத்து                                                                     0.01 %
கொழுப்புச்சத்து                                                          0.01 %
அமிலத்தன்மை ணீஏ                                                 4.5 %
பொட்டாசியம்  ட்ஞ்                                                290.0 %
சோடியம்  ட்ஞ்                                                            42.0 %
கால்சியம்  ட்ஞ்                                                           44.0 %
மக்னீசியம் ட்ஞ்                                                           10.0 %
பாஸ்பரஸ்  ட்ஞ்                                                            9.2 %
இரும்புச்சத்து  ட்ஞ்                                                  106.0 %
காப்பர்  ட்ஞ்                                                                   26.0 %

(ஆதாரம்  - சத்தியவாணி கிருஷ்ணன்குட்டி 1987)

100 கிராம் இளநீரில் கொடுக்கும் கலோரி
அளவு 17.4

இளநீரின் இயல்புகள்

·     இனிப்புச் சுவை நிறைந்தது. 

·     குளுமை தரக்கூடியது.

·     எளிதில் ஜீரணமாகக்கூடியது.

·    பித்த வாதத்தை குணப்படுத்தும் தன்மையுடையது.

·     பசியைத் தூண்டக்கூடியது

·     நீர்ப்பெருக்கியாக செயல்படக்கூடியது.

·     புத்துணர்வு தரக்கூடியது.

·     உடல் வெப்பத்தைத் தணிக்கக்கூடியது.

·     உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறையைப் போக்கும் தன்மை கொண்டது.

இளநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்

வெப்ப நாடுகளில் வாழ்பவர்களின் உடல் நிலை அதன் தன்மைக்கேற்ப அமையும்.  மாறுபட்டால் உடலில் பித்த நீர் அதிகரித்து, உடல் அதிக உஷ்ணமாகும்.  இதனால் உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படும்.  இவை நீங்க தினமும் இளநீர் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.  கண்கள் குளிர்ச்சி பெறும்.  வயிற்று நோய்கள் அகலும்.

வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து அவை வயிற்றின் உட்புறச் சுவர்களை தாக்கி புண்களை ஏற்படுத்தும்.  நீண்ட பட்டினி, அதிக உணவு, உடலுக்கு ஒவ்வாத உணவு இவற்றால் ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் தீர்க்கும் குணம் இளநீருக்கு உண்டு.

இளநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும்.  இரத்தச் சோகையைப் போக்குகிறது. 

இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு.  அதனால் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.

குழந்தைகளுக்கு கொடுத்தால் இதிலுள்ள சத்துக்கள் எலும்புகளுக்கும், உறுப்புகளுக்கும் வலுகொடுக்கும்.  உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.  குழந்தைகளுக்கு உண்டாகும்  நோய்களைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும்.

சிறுநீர் பெருக்கியாகவும், சிறுநீரகம் சீராக இயங்கவும், இளநீர் உதவுகிறது.  சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

மூளைக்கு புத்துணர்வும், நரம்புகளுக்கு வலுவும் ஏற்படுத்துகிறது.  நினைவாற்றல் தூண்டப்படுகிறது.

மது பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும்.  அதனை சீர் படுத்தும் குணம் இளநீருக்கு உண்டு.

இரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இருதயம் சீராக செயல்படும்.  இதய வால்வுகளை பலப் படுத்தும்.  தினமும் இளநீர் அருந்தி வந்தால் இதய நோய் ஏதும் அணுகாது.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.

டைபாய்டு, மஞ்சள் காமாலை நோயின் தாக்குதல் கொண்டவர்கள் இளநீர் அருந்தினால் உடல் விரைவாகத் தேறும்.

இளநீரில் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உதவுகிறது.

தேன் கலந்து அருந்தினால் தாது விருத்தியாகி ஆண்மை சக்தியை பெருக்கும்.

இந்திய மருத்துவ முறையில் இளநீர் பெரும்பங்கு வகிக்கிறது.

இளநீர் ஒரு சிறந்த டானிக்காக வயதானவர்களுக்கும் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் பயன்படுகிறது. 

கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஒரு அருமருந்து.  இளநீர் தினமும் அருந்தினால் உடல் வலுப்பெறும். மலச்சிக்கல் தீரும்.

அடிக்கடி இளநீர் பருகி  நீண்டநாள் ஆரோக்கியம் பெற்று வாழ்க.

தென்னை 5, 6 ஆண்டுகளில் பலன் தரும். பனை மரமோ பலன் தர 30 ஆண்டுகள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக