வெள்ளி, 7 டிசம்பர், 2012

உலக விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் தமிழனின் பஞ்சாங்கம்! 

ச.நாகராஜன்

ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்

      பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை? இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்! உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை! இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்? இதை நாம் பேடண்ட்  எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்!   
      தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று! அ,,,,,,,,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்! தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள்,பாதி ஐந்து எழுத்துக்கள்,யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்!
     சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப்  பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை!
1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை
   காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று  கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம்  சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர். ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்!
  அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்புராதனமான கணித சாஸ்திர வெற்றி என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்:
     இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து  பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது.எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு.
    நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர  கிரகணம் தோன்றும்,  கிரகண அளவு (பரிமாணம்)இவ்வளவு,இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள்.அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது.கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கிரகணத்தைப் பற்றி மட்டும் அவர்கள் கூறுவது சரியாய் இருக்குமானால் சாஸ்திரம் செய்யக் கூடாது என்று கூறுவது பொய்யாகவா இருக்கும்?சாஸ்திரம் என்பது ஒரு கடினமான கணக்கு.அதுவும் ஒரு வகை விஞ்ஞானம்.வயிற்றுப் பிழைப்புக்காக அதைத் தவறாகப் பயன்படுத்தும் கூட்டத்தால் அதன் மதிப்பு குறைந்து விட்டது.ஆனால் நமது முன்னோர்கள் கிரகணம் பற்றி முன்பே கூறும் அளவில் வானவியல் கணித மேதைகளாக இருந்துள்ளார்கள்.இதை உலகம் இந்த கிரகணம் பற்றிய அவர்களது மதிப்பீட்டில் இருந்து தெரிந்துகொண்டு வாழ்த்துகிறது.
   இப்படிப்பட்ட கணித இயல் நமக்கு இருந்தும் இதை மேலும் மேலும் ஆராய்ந்து வளர்த்துக் கொள்ள முன்வரவில்லை.அதனால் உலகில் நாம் இன்று பின் தங்கி உள்ளோம். இனியாவது நமது வான இயல் கணிதங்களை ஆராய்ந்து தெளிவாக்கி முன்னேறுவோமா என்பது தான் கேள்வி.
   தினமணியின் அருமையான கட்டுரை 1980ல் சுட்டிக் காட்டிய அவல நிலை முப்பத்தோரு வருடங்கள் ஆகியும் இன்னும் நீங்கவில்லை என்பது வருத்தம் தரும் ஒரு உண்மை. அரசும் பொது மக்களும் பஞ்சாங்கக் கலையை வளர்க்கவும் முன் வரவில்லை; அதைக் கணிக்கும் பஞ்சாங்க ஜோதிடர்களைக் கௌரவிக்கவும் இல்லை.
சங்க இலக்கியம் தெரிவிக்கும் சந்திர சூரிய கிரகணங்கள்
    இப்படிப்பட்ட அருமையான கிரகண செய்திகளை சங்கத் தமிழ் இலக்கியம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டிற்கு இரு குறிப்புகளை மட்டும் இங்கு பார்ப்போம்.
  கலித்தொகையில் மட்டும் எடுத்துக்கொண்டால் பல இடங்களில் சந்திரகிரகணம் (சந்திரனை ராகு பற்றுதல்) குறிப்பிடப்படுகிறது.  ஐவாய் அரவின் இடைப்பட்டு நைவாரா மையின் மதியின் விளங்கு முகத்தாரை (கலி 62;13-14)
    அடுத்து சூரிய கிரகணம் (சூரியனை கேது பற்றுதல்) பற்றி மலைபடுகடாம் இப்படிக் குறிப்பிடுகிறது:-பாஅய்ப் பகல்செய்வான் பாம்பின் வாய்ப் பட்டான் கொல்” (வெண்பா 1)
செக்கோஸ்லேவிகிய விஞ்ஞானியும் பஞ்சாங்கமும்
   இது ஒருபுறம் இருக்க பஞ்சாங்கம் கூறும் உண்மை ஒன்றைக் காண செக்கோஸ்லேவிகியா விஞ்ஞானி ஒருவர் செய்த ஆராய்ச்சி வியப்புக்குரிய ஒன்றாகும். அது என்ன என்பதைப் பார்ப்போம்!
                                                                                                   -தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக